திருத்தந்தை : மற்றவர்களை வரவேற்கும் இடமாக திருஅவையை மாற்றுங்கள்
செப்.17,2013. அண்மைக்காலங்களில் இடம்பெற்ற சில அவதூறு நடவடிக்கைகள் திருஅவையின் புனிதத்துவத்தை
வெற்றிகொள்ளமுடியாது என்பதை மனதில் கொண்டு, இறை அன்பின் உதவியுடன் தங்கள் இறை அழைப்பை
உயிர்துடிப்புடையதாக வைத்திருக்கவேண்டும் என அருள்பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இத்திங்கள் காலை புனித இலாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில்
உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் அம்மறைமாவட்ட அருள்பணியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை,
தன் மேய்ப்புப்பணியில் சோர்வடைந்துள்ளது குறித்து தனக்கு வயதுமுதிர்ந்த அருள்பணியாளர்
ஒருவர் அண்மையில் எழுதிய கடிதம்பற்றிக் குறிப்பிட்டு, மேய்ப்புப்பணியின்போது சோர்வு என்பது
இயல்பானதே என்றார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அருள்பணியாளர்களுள் ஐந்துபேர், இன்றைய
அருள்பணியாளர்களின் சவால்கள் குறித்து முன்வைத்த கேள்விகளுக்கு பதில்களை வழங்கினார் திருத்தந்தை.
மற்றவர்களை வரவேற்கும் இடமாக, அவர்களுக்கு நல் ஆலோசனைகளை வழங்கும் இடமாக திருஅவையை
அருள்பணியாளர்கள் மாற்றவேண்டிய தேவையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.