"எல்லைகளைக் கடந்த குடும்பம்" என்ற கருத்தை வெளியிட்டுள்ள மெக்சிகோ மற்றும்
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்
செப்.13,2013. தகுந்த ஆவணங்கள் இன்றி அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைவோரைக் குறித்தும்,
அதனால் உருவாகும் குடும்பப் பிரிவுகள் குறித்தும் மெக்சிகோ மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு
ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர். மெக்சிகோ ஆயர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லை
மறைமாவட்டங்களான Texas மற்றும் New Mexicoவைச் சார்ந்த ஆயர்களும் அண்மையில் நடத்திய ஒரு
கூட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் அனுமதியின்றி நுழையும் ஏராளமான மக்களைக் குறித்து
கவலை வெளியிடப்பட்டது. அனுமதியின்றி நுழைபவர்களால் அதிகம் பாதிக்கப்படுவது குடும்பங்களே
என்று கூறிய ஆயர்கள், "எல்லைகளைக் கடந்த குடும்பம்" என்ற கருத்துடன் இப்பிரச்சனையை மேய்ப்புப்பணி
கண்ணோட்டத்துடன் காணவேண்டும் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். சட்டத்தின் அடிப்படையில்
மட்டுமே தன் முடிவுகளை எடுக்கும் அமெரிக்க அரசு, மனிதாபிமானம், குடும்ப உறவுகள் ஆகிய
கண்ணோட்டங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.