2013-09-12 16:19:53

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் திருத்தந்தையின் பொது நிகழ்வுகள்


செப்.12,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மேற்கொள்ளும் பொது நிகழ்வுகளின் அட்டவணையை, இப்புதனன்று திருப்பீடம் வெளியிட்டது.
செப்டம்பர் 22ம் தேதி, இத்தாலியின் Cagliari என்ற தீவில் அமைந்துள்ள 'நலம்தரும் காற்றின் அன்னை' என்றழைக்கப்படும் மரியன்னையின் திருத்தலத்திற்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வதில் ஆரம்பமாகும் திட்டங்கள் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 29, ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் மறைகல்வி ஆசிரியர்கள் நாளையொட்டி புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தை திருப்பலி நிகழ்த்துவார்.
செப்டம்பர் 30ம் தேதி கர்தினால்கள் கூட்டத்தை முன்னின்று நடத்தும் திருத்தந்தை, இக்கூட்டத்தில், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான்பால் ஆகியோரை, புனிதர்களாக உயர்த்தும் நாளை அறிவிப்பார்.
அக்டோபர் மாதம் 4ம் தேதியன்று, அசிசி நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் மரியன்னையின் நாட்களில் வத்திக்கானில் மாலை செப வழிபாட்டையும், ஞாயிறு திருப்பலியையும் முன்னின்று நடத்துவார்.
நவம்பர் மாதத் துவக்கத்தில் கொண்டாடப்படும் அனைத்து ஆன்மாக்களின் திருநாளையொட்டி, கத்தோலிக்கத் திருஅவையில் 2012ம் ஆண்டு மறைந்த கர்தினால்கள், ஆயர்கள் அனைவரையும் நினைவுகூரும் திருப்பலியை நவம்பர் 4ம் தேதி, திங்களன்று திருத்தந்தை நிறைவேற்றுவார்.
நவம்பர் 24, ஞாயிறன்று கொண்டாடப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் இறுதி நாள் திருப்பலியை புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றுவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.