சுரங்கத் தொழில், மனித சமுதாயம் மீது கடும் விளைவுகளை உருவாக்குவது கவலை தரும் ஒரு
போக்கு - திருத்தந்தை
செப்.12,2013. சுரங்கத்தொழில் பல தலைமுறைகளைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு சுற்றுச்சூழல்
மற்றும் சமுதாய விளைவுகளை உருவாக்குகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். உலகின்
பல நாடுகளில் சுரங்கத் தொழிலை மேற்கொண்டுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் அண்மையில் வத்திக்கானில்
மேற்கொண்ட ஒரு கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய செய்தியில் இவ்வாறு
கூறியுள்ளார். நாடுகள் என்ற எல்லைகளையும், தலைமுறைகள் என்ற கால எல்லைகளையும் கடந்து,
சுரங்கத் தொழில், மனித சமுதாயம் மீது கடும் விளைவுகளை உருவாக்குவது கவலை தரும் ஒரு போக்கு
என்று கூறியத் திருத்தந்தை, சுரங்கத் தொழில்களில் அடிமைகளாக நடத்தப்படும் மக்கள் குறித்தும்
தன் கவலையை வெளியிட்டார். கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் முதன் முறையாக இத்தகைய
ஒரு கூட்டம் வத்திக்கானில் நடைபெறுகிறது என்று கூறிய வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று,
ஐரோப்பா, சீனா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கியமான நிறுவனங்கள் இக்கூட்டத்தில்
கலந்து கொண்டன என்று தெரிவிக்கிறது.