2013-09-12 16:28:02

அமைதியை நிலைநாட்டுவதில் உண்மையான தலைவரின் பெருமை அடங்கியுள்ளது - முதுபெரும் தந்தை 3ம் Gregory Laham


செப்.12,2013. அமைதியைத் தேடுவதிலும், அதனை நிலைநாட்டுவதிலும் உண்மையான தலைவரின் பெருமை அடங்கியுள்ளது, போரையும் அழிவையும் கொணர்வதில் அல்ல என்று சிரியா நாட்டு தமாஸ்கு நகரின் மெல்கத்திய வழிபாட்டு முறை கிரேக்க கத்தோலிக்க முதுபெரும் தந்தை 3ம் Gregory Laham அவர்கள் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவுக்கு எழுதியுள்ள ஒரு மடலில் இவ்வாறு கூறியுள்ள முதுபெரும் தந்தை 3ம் Gregory Laham அவர்கள், வல்லரசு என்பது அமைதியின் சக்தியை நிலைநாட்டும் ஓர் அரசு என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
வன்முறை வழி சிந்திப்பது அறிவு மிகுந்தவர்களின் வழியல்ல என்று கூறியுள்ள முதுபெரும் தந்தை Laham அவர்கள், இயேசுவின் வார்த்தைகளுக்கு உலகத் தலைவர்கள் மீண்டும் செவிசாய்த்தால், கலாச்சாரம், மனித மாண்பு, சுதந்திரம், அன்பு என்ற உயர்ந்த விழுமியங்களின் அடிப்படையில் மனித சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் தன் மடலில் சுட்டிக்காடியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் நோக்கி தற்போது உலகத் தலைவர்களும் சிரியாவின் தலைவர்களும் சிந்திக்க முனைந்திருப்பது நம்பிக்கை தரும் முயற்சி என்று கூறியுள்ள முதுபெரும் தந்தை Laham அவர்கள், கிறிஸ்தவர்களின் செபங்கள் தொடரவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.