செப்.10,2013. இலங்கையில் தான் மேற்கொண்ட பயணத்தின்போது தன்னைச் சந்தித்தவர்கள் எதிர்கொள்ளும்
அடக்குமுறைகள், மற்றும் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள்
ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் மீண்டும் கவலையை வெளியிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் 24வது மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அண்மை
இலங்கை பயணத்தின்போது தன்னைச் சந்தித்த மனித உரிமைக் காவலர்கள், செய்தியாளர்கள் மற்றும்
சமூகங்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய அடக்குமுறை, துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் குறித்து
தனது உடனடிக் கவலையையும் இங்கு வலியுறுத்த விழைவதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை
அவர்கள் கூறியுள்ளார். இலங்கையில் அவர் மேற்கொண்ட பயணத்தின்போது அவரைச் சந்தித்த சில
மாற்றுக் கருத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனையோர் மிரட்டப்பட்டதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.