சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் அப்பகுதி முழுவதையும் எரியச்செய்யும், புனிதபூமி
பிரான்சிஸ்கன் அருள்பணியாளர்
செப்.,07,2013. சிரியா மீது அமெரிக்க ஐக்கிய நாடு தாக்குதல்களை நடத்தினால் அது மத்திய
கிழக்குப்பகுதி முழுவதையும் கொழுந்துவிட்டெரியச் செய்யும் என தன்னோடு சேர்ந்த கிறிஸ்தவர்கள்
கவலைகொண்டுள்ளதாக, புனிதபூமியிலுள்ள பிரான்சிஸ்கன் அருள்பணியாளர் Peter Vasko கூறினார். சிரியாவில்
அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கினால், இரான் இஸ்ரேல்மீது ஏதாவது
தாக்குதலை நடத்தும், இப்படி, தொடர் இரத்தம் சிந்துதல் இடம்பெறும் என எச்சரித்துள்ளார்
அருள்பணியாளர் Vasko. புனிதபூமியில் வாழும் பாலஸ்தீனியர்களும் பிற கிறிஸ்தவர்களும்
எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விளக்குவதற்காக அமெரிக்க ஐக்கிய நாட்டில் 13 நகரங்களில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் அமெரிக்கரான அருள்பணியாளர் Vasko இவ்வாறு கூறினார். எருசலேமில்
27 ஆண்டுகளாக மறைப்பணியாற்றிவரும் அருள்பணியாளர் Vasko புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும்
துன்பங்கள் குறித்து நன்றாகவே அறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.