2013-09-05 17:05:14

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் ஒரு பணியை வைத்துள்ளார்


செப்.,05,2013. இயேசு தன்னைப் பின்செல்லுமாறு நம்மை அழைப்பது அதற்கென ஒரு நோக்கத்தைக் கொண்டது, அதனாலேயே அவர் நம்மை நோக்கி ‘முன்னேறிச்செல்’, ‘அஞ்சாதே’ என்ற உறுதியை வழங்குகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில் இவ்வியாழனன்று காலை திருப்பலி நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், நம் வாழ்வில் நுழையும் இயேசு, நம் இதயத்தைத் தாண்டிச்செல்லும்போது நம்மை அழைப்பது மட்டுமல்ல, நமக்கான பணியையும் தருகிறார், அதுவே நம் மறைப்பணி என்றும் கூறினார்.
இயேசு விரும்பும் இப்பணிக்கென நாம் எதையெல்லாம் துறக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து அதன்படி நாம் செயல்பட வேண்டியிருக்கும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் பாதையில் செல்வது என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல, மாறாக, அவரைப் பின்பற்றி நமக்குரிய கடமையை, அதாவது மறைப்பணியை ஆற்றுவதாகும் எனவும் தனது மறையுரையில் எடுத்தியம்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்முடைய பணிகளில் வரும் சவால்களையும், தடைகளையும் தாண்டும் பலத்தையும் ஆறுதலையும் இறைவனே தருவார் என்ற உறுதியை இத்திருப்பலியில் வழங்கினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.