San Marino குடியரசின் ஆட்சியாளர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு
செப்.04,2013. San Marino குடியரசின் தலைவர் Antonella Mularoni, அக்குடியரசின் அரசுத்
தலைவர் Denis Amici ஆகிய இருவரையும் இப்புதன் பொது மறைபோதகத்துக்குப் பின்னர் சந்தித்தார்
திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால்
தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக்
மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தனர் San Marino குடியரசின் ஆட்சியாளர்கள். San
Marino குடியரசுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே இடம்பெறும் நல்லுறவுகள் குறித்து மகிழ்ச்சி
தெரிவிக்கப்பட்ட அதேவேளை, மத்திய கிழக்குப் பகுதியின் கவலைதரும் நிலை பற்றிக் குறிப்பிட்டு,
அப்பகுதியில் அமைதியான தீர்வு காணப்படுவதற்கும், பாதுகாப்புக்கும் அனைத்து நாடுகளும்
ஓர் உடன்பாட்டுக்கு வரவேண்டுமென்று இச்சந்திப்புகளில் கேட்டுக்கொள்ளப்பட்டன. இத்தாலி
நாட்டுக்குள் இருக்கும் San Marino குடியரசின் தலைவரும், அரசுத் தலைவரும் ஆறு மாதங்களுக்கு
ஒருமுறை அந்நாட்டின் பொது அவையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.