வரும் அக்டோபரில் அசிசி செல்லவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணத் திட்டங்கள்
செப்.,03,2013. வருகிற அக்டோபர் 4ம் தேதி, இத்தாலியின் அசிசிக்கு ஒரு நாள் திருப்பயணம்
மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அக்டோபர்
4ம் தேதி காலை 7.45 மணிக்கு கெலிகாப்டரில் அசிசி சென்றடையும் திருத்தந்தை பிரான்சிஸ்,
8 மணிக்கு, நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிச் சிறாரைப் பராமரிக்கும் Serafico நிறுவனத்துக்குச்
செல்வார். பின்னர் புனித பிரான்சிஸ் மனம்மாறக் காரணமான திருச்சிலுவை இருக்கும் புனித
தமியான் ஆலயம் செல்லல், புனித பிரான்சிஸ் தனது ஆடைகளைக் கழற்றிக்கொடுத்த அறையைப் பார்வையிடுதல்,
அப்புனிதரின் கல்லறை இருக்கும் பசிலிக்காவில் செபித்தல், அவ்வளாகத்தில் திருப்பலி என
புனித பிரான்சிஸ் அசிசியாருடன் தொடர்புடைய பல இடங்களுக்குச் சென்று செபிப்பார் திருத்தந்தை.
மாலையில் அப்பகுதி இளையோரைச் சந்தித்த பின்னர் உரோம் திரும்புவார் திருத்தந்தை பிரான்சிஸ்.