2013-09-02 16:16:27

'பணிபுரிவதற்கெனவே கீழிறங்கி வந்த இயேசுவின் அருகாமையில் இருப்பதே நமக்குரிய சிறப்பான இடம்' : முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


செப்.,02,2013. 'பணிபுரிவதற்கெனவே கீழிறங்கி வந்த இயேசுவின் அருகில் இருப்பதே நமக்குரிய சிறப்பான இடம்' என்றார் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பல ஆண்டுகள் தொடர்ந்து இறையியல் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள முன்னாள் திருத்தந்தை அவர்களின் மாணவர்கள், அவர் திருத்தந்தையானதற்கும் முன்னரே ஒவ்வோர் ஆண்டும் அவருடன் கூடி கருத்தரங்கு ஒன்றை நடத்தி, கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தின்படி, இவ்வாண்டும் உரோமைக்கு அருகிலுள்ள காஸ்தல் கந்தோல்ஃபோ நகரில் கூடி கருத்தரங்கை நடத்தினர். அக்கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியாத முன்னாள் திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் நாட்டிற்குள் உள்ள ஒரு கோவிலிலில் அம்மாணவர்களுக்கென திருப்பலி நிறைவேற்றினார். இத்திருப்பலியில் தன் முன்னாள் மாணவர்களுக்கு மறையுரை வழங்கிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதலானோர் கடைசியாவர் என்ற இயேசுவின் வார்த்தைகளையும் எடுத்துரைத்து, மாடடைக்குடிலில் பிறந்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசுவின் அருகாமையே கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் உகந்த இடம் என மேலும் கூறினார்.
38 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் இக்கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.