திருத்தந்தையை இவ்வாரத்தில் சந்திக்கவுள்ளார் ஆர்த்தடாக்ஸ் சீரோ-மலங்கரா முதுபெரும் தந்தை
செப்.,02,2013. இவ்வாரம் புதன் முதல் வெள்ளிவரை வத்திக்கான் வரும் ஆர்த்தடாக்ஸ் சீரோ-மலங்கரா
கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம் மொரான் பசிலியோஸ் மார்த்தோமா பவுலோஸ், இந்நாட்களில்
திருத்தந்தையையும், திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலுள்ள
ஆர்த்தடாக்ஸ் சீரோ-மலங்கரா கிறிஸ்தவ சபை விசுவாசிகளை சந்திக்கும்பொருட்டு இப்பயணத்தை
மேற்கொண்டுள்ள முதுபெரும் தந்தை இரண்டாம் பவுலோஸ் வத்திக்கான் அதிகாரிகளையும் சந்திக்க
விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 1983ம் ஆண்டு உரோம் நகரிலும்,
1986ம் ஆண்டு திருத்தந்தையின் திருப்பயணத்தின்போது இந்தியாவின் கோட்டயத்திலும் இக்கிறிஸ்தவ
சபையின் தலைவர் முதலாம் மோரன் மார் பசிலியோஸ் மார்த்தோமா மேத்யூஸுக்கும் இடையே சந்திப்புகள்
இடம்பெற்றுள்ளன. மலங்கரா ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபையின் இரு பிரிவுகளுள்
ஒன்றே இந்த ஆர்த்தடாக்ஸ் சீரோ-மலங்கரா கிறிஸ்தவ சபையாகும். தனித்து இயங்கும் இக்கிறிஸ்தவ
சபையில் 25 இலட்சம் அங்கத்தினர்கள் உள்ளனர். 30 மறைமாவட்டங்களையும் 33 ஆயர்களையும் 1700க்கும்
மேற்பட்ட குருக்களையும் கொண்டு இயங்குகிறது இக்கிறிஸ்தவ சபை.