சிரியாவுக்கெதிரான மேற்கத்திய நாடுகளின் இராணுவத் தாக்குதல்களுக்கு மேற்கத்திய திருஅவைத்
தலைவர்கள் எதிர்ப்பு
ஆக.,31,2013. சிரியாவுக்கெதிரான மேற்கத்திய நாடுகளின் இராணுவத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும்
என்று அஞ்சப்படும்வேளை, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கத்தோலிக்கத் தலைவர்கள், இந்தத் தாக்குதல்கள்
போர்க்கானச் சூழல்களை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர். அனைத்துலக சமுதாயத்தின் ஒத்துழைப்பின்
பேரில் சிரியாவில் போரிடும் தரப்புக்களுக்கு இடையே இடம்பெறும் உரையாடலும், பேச்சுவார்த்தையுமே
அந்நாட்டில் இடம்பெறும் சண்டைக்கு ஒரே தீர்வு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்,
ஜோர்டன் அரசரும் கூறியதையே அமெரிக்க ஆயர்களும் வலியுறுத்த விரும்புவதாக, அமெரிக்க ஆயர்
Richard E. Pates, அமெரிக்க அரசுச் செயலர் John Kerryக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
ஆஸ்ட்ரியாவின் Heute நாளிதழில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ள வியன்னா கர்தினால் Christoph
Schonborn, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள்
அந்நாடுகளுக்கு அமைதியைக் கொண்டு வந்துள்ளனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இன்னும்,
இந்த இராணுவத் தாக்குதல்கள் குறித்து எச்சரித்துள்ள ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர் Rober
Zollitsch, தமாஸ்கு நகருக்கு அருகில் வேதிய ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை
அறிவதற்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐ.நா. ஆதரவுடன் விசாரணை நடத்த வேண்டுமெனக்
கூறியுள்ளார்.