2013-08-30 15:01:47

ஜாம்பியக் கர்தினால் Mazombwe காலமானார், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரங்கல் செய்தி


ஆக.,30,2013. ஜாம்பியாவின் லுசாக்கா உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் கர்தினால் Joseph Medardo Mazombwe அவர்களின் இறப்பையொட்டி அந்நாட்டுத் திருஅவைக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
லுசாக்கா பேராயர் Telesphore George Mpundu அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, கர்தினால் Mazombwe அவர்கள் தலத்திருஅவைக்கும், அகிலத் திருஅவைக்கும் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டியுள்ளதோடு, அவரின் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகக் கூறியுள்ளார்.
இவ்வியாழன் மாலை லுசாக்காவின் போதனை பல்கலைக்கழக மருத்துவமனையில் இறந்த 82 வயதாகும் கர்தினால் Mazombwe திருப்பீடத்தின் நற்செய்தி அறிவிப்புப் பேராயத்திலும், திருப்பீடத்தின் Cor Unum பிறரன்பு அவையிலும் உறுப்பினராக இருந்தவர்.
கர்தினால் Mazombwe அவர்களின் இறப்போடு கத்தோலிக்கத் திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 201 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆகவும் மாறியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.