ஆகஸ்ட் 31, 2013. கற்றனைத்தூறும்...... கொள்ளுப் பருப்பு
‘இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்’ என்பது பழமொழி. இளைத்தவன்
எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால்
ஊக்கம் பெறுவார்கள். உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் சக்தி, கொள்ளுக்கு உள்ளதால்,
கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர். எலும்புக்கும், நரம்புக்கும்
உரம் தரக்கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும்
முன்னோர்கள் அளித்தனர். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு
உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை
அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும்
ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. கொள்ளை நீரிலிட்டு கொதிக்க
வைத்து, அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். குழந்தைகளுக்குச்
சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால், சளி காணாமல் போய்விடும் என்கிறார்கள். கொள்ளு
சூப், கொள்ளு இரசம், கொள்ளுத் துவையல், கொள்ளுக் குழம்பு ஆகியவை வைத்து அவ்வப்போது உண்டு
வந்தாலும் உடல் எடை குறையும்.