2013-08-27 16:06:25

கற்றனைத் தூறும் ஆகஸ்ட் 28, எனக்கொரு கனவு உண்டு (I have a dream) உரையின் பொன் விழா


1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி, 2,50,000க்கும் அதிகமானோர் பங்கேற்ற ஓர் ஊர்வலம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
கறுப்பின மக்களும், அவகளது விடுதலையை வரவேற்ற வேற்றின மக்களும் இணைந்து, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் தலைமையில் மேற்கொண்ட இந்த ஊர்வலத்தின் பொன் விழா ஆண்டு இது.
அமெரிக்கக் குடியுரிமை இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், வாஷிங்க்டன் மாநகரில், லிங்கன் நினைவுத்திடலில் (Lincoln Memorial) வழங்கிய 'எனக்கு ஒரு கனவு உண்டு' (I have a dream) என்ற உரை, உலகப் புகழ்பெற்ற உரைகளில் ஒன்றாக இன்றளவும் விளங்குகிறது.
1863ம் ஆண்டு, புத்தாண்டு நாளன்று, அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள், அடிமை விடுதலைச் சட்டத்தை வெளியிட்டார். இச்சட்டம் வெளியிடப்பட்டு நூறாண்டுகள் கழித்து, மார்ட்டின் லூத்தர் கிங் அடிமை விடுதலை என்ற கனவை, ஓர் உரையாக ஆகஸ்ட் 28ம் தேதி வழங்கினார்.
புகழ்பெற்ற இவ்வுரையின் பொன்விழா நாளன்று, இவ்வுரையின் ஒரு பகுதியை மீண்டும் நம் சிந்தனைகளில் ஒலிக்கச் செய்வோம்:
எனக்கொரு கனவு உண்டு. அமெரிக்கக் கனவில் வேரூன்றிய ஒரு கனவு இது.
"எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப்பட்டனர் என்பது நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மை" என்று இந்நாடு உலகிற்குப் பறைசாற்றியுள்ள உறுதிமொழியை, ஒருநாள் முழுவதும் வாழும் என்ற கனவு எனக்கு உண்டு.
முன்னாள் அடிமைகளின் பிள்ளைகளும், முன்னாள் அடிமை முதலாளிகளின் பிள்ளைகளும் ஜார்ஜியாவின் சிவந்த குன்றுகளில் ஒருநாள் சரிசமமாய் அமர்ந்து விருந்துண்பர் என்ற கனவு எனக்கு உண்டு.
அடக்குமுறை வெப்பத்தில் இன்னும் வெந்துகொண்டிருக்கும் மிசிசிபி மாநிலம் என்ற பாலைவனம், நீதியும், அமைதியும் கொண்ட சோலையாக ஒருநாள் மாறும் என்ற கனவு எனக்கு உண்டு.
தங்கள் தோல் நிறத்தைக் கொண்டல்ல, மாறாக தங்கள் குணநலன்களைக் கொண்டு மக்களை எடைபோடும் ஒரு நாட்டில் என்னுடைய நான்கு குழந்தைகளும் ஒருநாள் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு.
ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், ஒவ்வொரு மலையும், குன்றும் தாழ்த்தப்படும், கரடு முரடான பகுதிகள் சம நிலமாக்கப்படும், கோணலான பாதைகள் நேராக்கப்படும் இறைவனின் மகிமை தெளிவாகும், இதை அனைவரும் ஒருசேரக் காண்பர். எனக்கொரு கனவு உண்டு...
இருபதாம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட தலைசிறந்த உரைகள் என்ற கருத்தில் 2000மாம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் 'எனக்கொரு கனவு உண்டு' என்ற இந்த உரையை பெருமளவானவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
1963ம் ஆண்டு வழங்கப்பட்ட இவ்வுரையின் விளைவாக, இனம், மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரும் வேற்றுமைப்படுத்தப்படக் கூடாது என்ற குடியுரிமைச் சட்டம் 1964ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதற்கு அடுத்த ஆண்டு அனைவரும் வாக்களிக்கலாம் என்ற சட்டமும் அமலுக்கு வந்தது. 1964ம் ஆண்டு அமைதிக்கான நொபெல் பரிசு மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், தனது 39வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆதாரம் : Wikipedia / The Guardian








All the contents on this site are copyrighted ©.