சிரியாவுக்காக செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு
ஆக.26,2013. சிரியாவில் அமைதி திரும்ப மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள். அளவுகடந்த துயரத்தோடும், கவலைகளோடும், சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் துயரமான
நிகழ்வுகளை தான் கவனித்துகொண்டிருப்பதாக இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் கூறிய திருத்தந்தை,
அங்கு போர் ஆயுதங்களின் சப்தம் ஓய்ந்து, அமைதி திரும்ப அழைப்பு விடுத்தார். “எதிர்த்து
நின்று பலத்தைக் காட்டுவதில் அல்ல, மாறாக, சந்திப்பின் மூலமாகவும், பேச்சுவார்த்தைகள்
மூலமாகவுமே பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும்” என்ற திருத்தந்தை அவர்கள், மேலும் உயிரிழப்புகளையும்,
அழிவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்துயரமான சூழ்நிலைக்கு தீர்வு காண, உலகநாடுகள்
முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இப்போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக,
புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரைக்காக கூடியிருந்தவர்களோடு இணைந்து செபித்த திருத்தந்தை,
தன்னுடைய அனுதாபங்களையும் தெரிவித்தார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி