கிறிஸ்தவ சபைகளின் உடைமைகள் மீது அரசின் புதிய கட்டுப்பாட்டு முயற்சிக்கு எதிர்ப்பு
ஆக.26,2013. ஆந்திர மாநிலத்தின் கிறிஸ்தவ சபை சொத்துக்கள் மீதும் கல்விக்கட்டிடங்கள்
மீதும் புதிய சட்டங்களைக் கொண்டுவருவது குறித்து ஆராயும் நோக்கில் அமைச்சர்கள் கொண்ட
குழு ஒன்றை ஆந்திர முதல்வர் உருவாக்கியிருப்பதற்கு தன் எதிர்ப்பை வெளியிட்டுள்லது ஆந்திர
கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு. கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்போடு விவாதிக்காமல்,
தனக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்து கிறிஸ்தவ சொத்துக்கள் மீதான புதிய சட்டங்களை கொண்டுவர
முயல்வது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கு கடிதம் ஒன்றை
அனுப்பியுள்ளது இக்கூட்டமைப்பு. கிறிஸ்தவ சபைகளின் சில உடைமைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது
குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவற்றை மீட்டுத்தரவேண்டும் எனவும் முதல்வரை
விண்ணப்பித்துள்ளது ஆந்திர கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு. தங்கள் உடைமைகளை நிர்வகிப்பதற்கு
கிறிஸ்தவ சபைகளுக்கு இருக்கும் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றை அரசு அமைப்பின்
புதிய சட்ட திட்டங்களூக்கு உட்படுத்த முயல்வது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது எனவும் ஆந்திர
கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.