கிறிஸ்தவர்கள் வாழும் கந்தமால் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
ஆக.22,2013. ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளுக்குக் கூடுதல்
பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆளுனர் Tirumala Nayak அவர்கள் கூறினார். 2008ம்
ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, கந்தமால் பகுதியில், இந்து அடிப்படைவாத வன்முறை கும்பலால் கிறிஸ்தவர்கள்
கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாயினர். அந்த வன்முறையின் 5ம் ஆண்டு நிறைவு நெருங்கிவரும்
வேளையில், மீண்டும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் நிகழாதவாறு காவல்துறையினர் முயற்சிகள்
எடுத்துவருவதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இந்த 5ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும்
வகையில் ஆகஸ்ட் 25ம் தேதி, ஞாயிறன்று, ஓடிஸ்ஸாவின் தலைநகர் புவனேஸ்வரில் கருத்தரங்குகளும்,
அமைதியான ஊர்வலங்களும் மேற்கொள்ளப்படும் என்று, இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்கும் அருள்
பணியாளர் அஜய் குமார் சிங் UCAN செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். மிகவும்
வெளிப்படையான முறையில் நிகழ்ந்த இந்த வன்முறைகளில் இதுவரை தகுந்த நீதி கிடைக்கவில்லை
என்றும், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் அருள் பணியாளர் சிங்
சுட்டிக்காட்டினார்.