உரையாடலும், ஒப்புரவும் மட்டுமே எகிப்து நாட்டுஅமைதிக்குச்
சிறந்த வழிகள் - கர்தினால் சாந்த்ரி
ஆக.22,2013. எகிப்து நாடு, அமைதியில் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்கு உரையாடலும், ஒப்புரவும்
மட்டுமே சிறந்த வழிகள் என்று கீழை வழிபாட்டு முறை திருப்பீட பேராயத்தின் தலைவர் கர்தினால்
லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் கூறியுள்ளார். எகிப்தில் அமைதி நிலவ அனைத்துலகத் திருஅவை
செபிக்கவேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்து வருவதைச்
சுட்டிக்காட்டி, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு கர்தினால் சாந்த்ரி
அவர்கள் இப்புதனன்று அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். கர்தினால் சாந்த்ரி
அவர்கள், தன் செய்தியில், எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 2ம் Tawadros
அவர்களுக்கும், எகிப்தில் உள்ள ஏனைய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களுக்கும் தன் செபம் கலந்த
ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். எகிப்தின் உண்மையான அமைதியையும், வளர்ச்சியையும்
விரும்பும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் அந்நாட்டில் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியன
என்பதையும் கர்தினால் சாந்த்ரி தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். குழந்தை இயேசுவும்,
திருக்குடும்பமும் தங்கள் சொந்த நாட்டிலிருந்து அகதிகளாய் வெளியேறியபோது அவர்களுக்குத்
தஞ்சம் அளித்த எகிப்து நாடு, துயரத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பிவரும்
செபங்களால் மீண்டும் அமைதியைச் சுவைக்கும் என்ற தன் நம்பிக்கையையும் கர்தினால் சாந்த்ரி
அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.