திருத்தந்தையின் தலைமையில் அக்டோபர் 12, 13ம் தேதிகளில் மரியன்னையின்
நாட்கள்
ஆக.21,2013. நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் ஒரு சிறப்பு நிகழ்வாக, வருகிற அக்டோபர் மாதம்
12, மற்றும் 13ம் தேதிகளில் மரியன்னையின் நாட்கள் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப்
பேராலய வளாகத்தில் கொண்டாடப்படும் என்று புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை
அறிவித்துள்ளது. 1917ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி பாத்திமா நகரில் மரியன்னை
இறுதி முறையாகத் தோன்றியதை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. பாத்திமா நகர் திருத்தலத்தில் வணங்கப்படும் அன்னை மரியாவின்
திருஉருவம், அக்டோபர் 12, சனிக்கிழமையன்று வத்திக்கானை அடையும். அன்று மாலை 5 மணியளவில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியின் திரு உருவத்திற்கு முன் செபமாலை சொல்லி,
மறையுரையும் வழங்குவார். இதைத் தொடர்ந்து, உலகெங்கும் உள்ள மரியன்னை திருத்தலங்களை
நினைவுகூர்ந்து பசிலிக்கா வளாகத்தில் செபமாலையும், முழு இரவு செப வழிபாடும் நடைபெறும். அக்டோபர்
13, ஞாயிறன்று, காலை 10 மணிக்கு மீண்டும் செபமாலையும், அதைத் தொடர்ந்து, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் ஆற்றும் திருப்பலியும் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில்
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.