ஆக.19,2013. காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டிருந்த எண்பதுக்கும்
அதிகமான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளதாக ஐ.நா. நிறுவனத்தால் அனுப்பப்பட்டிருந்த மீட்புக்
குழு ஒன்று கூறுகிறது. காங்கோவின் கடங்கா மாநிலத்தில் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுவில்
சேர்க்கப்பட்டு தற்போது ஜ.நா.வின் முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ள ஏழைச்சிறார்களுள்,
எட்டு வயதுச் சிறார்களும் அடங்குவர். அந்நாட்டின் தென்கிழக்கிலுள்ள கடங்கா மாநிலத்தில்
செயல்பட்டுவருகின்ற மாய் மாய் என்ற ஆயுதக் குழுவினால் கடந்த ஆறு மாதங்களில் இச்சிறார்கள்
வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் 13 பேர் சிறுமிகள். காப்பாற்றப்பட்டுள்ள
குழந்தைகளுள் நாற்பது பேர் அவரவர் குடும்பத்திடம் சேர்க்கப்பட்டுவிட்டனர் என்றும், மற்றவர்கள்
அதிகாரிகளின் பராமரிப்பில் இருந்துவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.