2013-08-17 15:55:47

பிரேசில் திருஅவைக்குத் திருத்தந்தை நன்றி


ஆக.,17,2013. கடந்த ஜூலையில் தான் பிரேசிலுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தில் தனக்கு கிடைத்த இனிய வரவேற்புக்கு நன்றி சொல்லி அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரும், Aparecida பேராயருமான கர்தினால் Raymundo Damasceno Assis அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசிலின் அனைத்து ஆயர்கள், மேய்ப்பர்கள், பங்குமக்கள், 28வது உலக இளையோர் தினத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், திருஅவையின் பல்வேறு இயக்கங்கள், கழகங்கள் என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிக்குமாறு அதில் கூறியுள்ளார் திருத்தந்தை.
இத்திருப்பயண நிகழ்வுகள், பிரேசில் திருஅவையில் புதிய வசந்தத்தை மலரச்செய்யும் என்று தான் நம்புவதாகவும், இவை அத்தலத்திருஅவைக்கு அருளை வழங்குவதாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கொட்டும் மழையிலும் Aparecida அன்னைமரி வளாகத்தில் நின்றுகொண்டிருந்த திருப்பயணிகளை மறக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், Aparecida அன்னைமரியா பிரேசில் நாட்டை ஆசீர்வதிக்குமாறு தான் செபிப்பதாகவும் அதில் எழுதியுள்ளார்.
பிரேசிலின் ரியோ தெ ஜனெய்ரோவில் நடைபெற்ற 28வது உலக இளையோர் தின நிகழ்வுகளையொட்டி கடந்த ஜூலை 23 முதல் 29 வரை அந்நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.