கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பதன் முக்கிய கடமை அவரைப் பறை சாற்றுவதே – திருத்தந்தையின்
செய்தி
ஆக.15,2013. கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பதன் முக்கிய கடமை அவரைப் பறை சாற்றுவதே என்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். அர்ஜென்டீனா நாட்டில் உள்ள Santisima Concepcion
என்ற மறைமாவட்டம் தனது 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையொட்டி, அம்மறைமாவட்டத்தின் ஆயர்
Armando José Maria Rossi அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் திருத்தந்தை
இவ்வாறு கூறியுள்ளார். தான் Buenos Aires பேராயராக இருந்தபோது இம்மறைமாவட்டக் குருக்களுக்கு
ஆண்டு தியானம் கொடுத்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை, 'கிறிஸ்துவுடன் நடைபயிலுங்கள், சீடராகுங்கள்,
பறைசாற்றுங்கள் என்ற மூன்று கருத்துக்களில் அவர்களுக்கு தன் செய்தியை வழங்கியுள்ளார். தங்களுக்கு
எல்லாம் தெரியும் என்ற திருப்தியில் ஒரே இடத்தில் தங்கிவிடுவது, கிறிஸ்துவர்களுக்கும்,
குறிப்பாக, அருள் பணியாளர்களுக்கும் உள்ள ஓர் ஆபத்து என்ற எச்சரிக்கையை வழங்கும் திருத்தந்தையின்
செய்தி, கிறிஸ்துவுடன் தொடர்ந்து நடந்து செல்வதற்கும் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறது. கிறிஸ்தவ
வாழ்வில் இதுவரை கண்ட வளர்ச்சியில் திருப்திகொண்டு, வளர்ச்சியை நிறுத்திவிடாமல், தொடர்ந்து
கிறிஸ்துவின் மீது தாகம் கொண்டவர்களாக மறைமாவட்டத்தின் அனைத்து மக்களும் விளங்கவேண்டும்
என்ற ஆசீருடன் திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.