900 ஆண்டுகளுக்கு முன் எருசலேமில் இயங்கி வந்த மருத்துவமனையின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு
ஆக.14,2013. 900 ஆண்டுகளுக்கு முன் எருசலேம் நகரில் இயங்கி வந்த ஒரு மருத்துவமனையின்
இடிபாடுகள் பூமிக்கடியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புனித யோவானின் மருத்துவர்கள்
என்ற பெயரைத் தாங்கிய ஒரு துறவுச் சபையினர் 1099ம் ஆண்டுக்கும் 1291ம் ஆண்டுக்கும் இடையே
நடத்தி வந்த ஒரு மருத்துவமனை பழைய எருசலேம் நகரின் இடிபாடுகள் நடுவே கண்டறியப்பட்டுள்ளது
என்று Order of Malta என்ற அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது. திருமுழுக்கு யோவான்
பெயரால் அர்ப்பணிக்கப்பட்டிருந்த இந்த மருத்துவமனையில் 2000க்கும் அதிகமானோர் தங்கியிருக்கும்
வசதிகள் இருந்ததென்று கூறப்படுகிறது. Grand Bazaar என்ற நிறுவனம் கிழக்கு எருசலேமில்
ஓர் உணவகத்தைக் கட்ட அடித்தளம் இடுவதற்கு நிலத்தைத் தோண்டியபோது புதையுண்ட இந்த மருத்துவமனை
கண்டுபிடிக்கப்பட்டதென்றும், அகழ்வாராய்ச்சி துறை தற்போது பணிகளை மேற்கொண்டிருக்கும்
இப்பகுதி, 2014ம் ஆண்டு மக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.