ஆக.,10,2013. இச்சனிக்கிழமை மாலை 4 முதல் 5 மணிவரை புதுடெல்லியின் இயேசுவின் திருஇதய
ஆலயத்துக்கு முன்னர் டில்லி பேராயர் அனில் கூட்டோ அவர்களின் தலைமையில் கறுப்பு தினம்
கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத்
தெரிவிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்தக் கறுப்பு தின நிகழ்வில் வட இந்தியத் திருச்சபை
பொதுச்செயலர் Alwan Masih, வழக்கறிஞர் Mushtaque Ahmed, அனைத்திந்திய Jamiatul Hawareenனின்
தேசியத் தலைவர் Hafeez Ahmad Hawari, இன்னும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள்,
இஸ்லாம் மதப் பிரதிநிதிகள், கிறிஸ்தவப் பொதுநிலையினர் என, பலர் கலந்து கொண்டனர். இந்தியாவில்
63 ஆண்டுகளுக்கு மேலாக, தலித் கிறிஸ்தவர்களுக்கும் தலித் முஸ்லீம்களுக்கும் மதத்தின்
அடிப்படையில் அரசியல் அமைப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து இந்திய
சுதந்திர தினத்துக்கு முன்வரும் ஞாயிறன்று கறுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.