பொதுவாக கண்களைச் சுற்றியுள்ள பகுதியானது மிகவும் மிருதுவான, அதிகக் கவனம் செலுத்த வேண்டிய
தோலாக உள்ளது. இதனைக் காப்பதற்கு அதிகக் கவனம் செலுத்துவது அவசியமாகும். கண்களைச் சுற்றியுள்ள
பகுதியில் ஏற்படும் கருவளையம் ஒருவரின் உடல் மற்றும் மனநிலையை எடுத்துக் காட்டுகின்றது.
உறக்கமின்மை, மனக்கவலை, உடல் நலக்குறைவு, சோர்வு, மனஅழுத்தம் என, பல விடயங்களை இந்தக்
கருவளையம் காட்டிக்கொடுத்துவிடும். இது மட்டுமல்லாமல், பரம்பரை ரீதியாகவும், சத்துக்
குறைவாலும் இந்தக் கருவளையம் ஏற்படுகிறது. உறக்கமின்மையினால் கருவளையம் ஏற்படும்போது
நன்கு உறங்கினாலே போதுமானது. சிலருக்கு சத்துக்குறைவால், கண்களுக்கு அருகே உள்ள தோல்
சுருங்கி கருவளையம் தோன்றுகிறது. இதனைப் போக்க, புரதமம், நார்ச்சத்து, கொழுப்புச் சத்துள்ள
உணவுகளை சாப்பிட்டு வந்தால் தானாகவே இந்தக் கருவளையும் மறைந்து விடும். சிலருக்கு அதிகப்படியான
பணிப்பளுவால் இது ஏற்படுகிறது. அதிக நேரம் கணினிமுன் அமர்ந்து பணியாற்றுபவர்கள், அதிக
நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள் அல்லது படிப்பவர்கள், தொடர்ந்து தொலைக்காட்சிப்
பார்ப்பவர்கள் போன்றோர்க்கும் இந்தக் கருவளையம் ஏற்படுகிறது. எனவே, கண்களுக்கு அதிகப்படியான
அழுத்தம் கொடுப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாமல், அதிக உடல் உழைப்பும்,
மனப்பதட்டமும்கூட கருவளையத்தை ஏற்படுத்தலாம். வீட்டில் அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்யாமல்,
வேலைகளைப் பகிர்ந்து கொள்வதால், வேலைப்பளு குறையும். சிலருக்கு இரத்த சோகை காரணமாகவும்
கருவளையம் ஏற்படுகிறது. இரும்புச் சத்துள்ள உணவுகளையும், இரத்தத்தை அதிகரிக்க உதவும்
காய்கறிகளையும் அதிகம் சாப்பிட்டு இரத்த சோகையை சரி செய்தால், இந்தக் கருவளையமும் தானாக
மறைந்துவிடும். கீரை, நெல்லிக்காய், பீட்ரூட், நாவல்பழம் போன்றவற்றில் இரும்புச்சத்து
உள்ளது.