2013-08-08 17:46:10

அர்ஜென்டினா நாட்டின் எரிவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி


ஆக.08,2013. அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான Buenos Airesன் வடமேற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரொசாரியோ என்ற நகரில் இயற்கை எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கும், உறவினர்களை இழந்தவர்களுக்கும் தன்னுடைய ஆறுதலையும், இரங்கல் செய்தியையும் ரொசாரியோ மறைமாவட்டத்தின் ஆயர் José Luis Mollaghan மூலம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் நிறைசாந்தி அடைய தான் செபிப்பதாகவும், அச்செய்தியில் தெரிவித்துள்ள திருத்தந்தை, காயமடைந்தவர்களுக்கு, தன்னுடைய ஒருமைப்பாட்டையும், அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
திருத்தந்தையின் இச்செய்தி புனித கயத்தானோ திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருப்பவனியில் விசுவாசிகள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்ட இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 60 பேர் காயமடைந்திருப்பதாகவும் மேலும் 16 பேரை காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone, இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.