ஆக.07,2013. இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கிறிஸ்தவர்களுக்கெதிரான தாக்குதல்கள்
இடம்பெறக்கூடும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ள அதேவேளை, கத்தோலிக்கர் விழிப்புடனும்
கட்டுப்பாட்டுடனும் இருக்குமாறு கேட்டுள்ளார் ஜகார்த்தா பேராயர் Ignatius Suharyo. தென்
ஜகார்த்தாவின் Tebetவிலுள்ள அசிசி க்த்தோலிக்கப் பள்ளி வளாகத்தில் இச்செவ்வாய் காலையில்
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்குப் பின்னர் தனது உயர்மறைமாவட்ட மக்களுக்கு மின்னஞ்சலில்
இவ்வாறு கேட்டுள்ள பேராயர் Suharyo, கத்தோலிக்கர்கள், உடன் வாழும் மக்களுடன் நட்பும்,
ஒத்துழைப்பும் கொண்டு வாழுமாறு கூறியுள்ளார். மேலும், இரமதான் நோன்பு மாதம் முடிவடைந்ததைக்
குறிக்கும் கொண்டாட்டங்களோடு இத்தாக்குதல்கள் தொடர்புடையன என்று உள்ளூர் அருள்பணியாளர்
ஒருவர் கூறினார். உலகில் அதிகமான முஸ்லீம்களைக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் நலிந்த
குடிமக்களும் சிறுபான்மை மதத்தவரும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று
ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.