வத்திக்கான் வங்கியின் ஒளிவுமறைவற்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக ஓர் இணையதளம் ஆரம்பம்
ஆக.01,2013. வத்திக்கான் நிதி நிறுவனம் எவ்விதம் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள
விழையும் அனைவருக்கும் உதவியாக இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளோம் என்று இந்நிறுவனத்தின்
தலைவர் திருவாளர் Ernst von Freyburg அவர்கள் கூறியுள்ளார். வத்திக்கான் வங்கி என்று
முன்னரும், சமயப் பணிகள் நிறுவனம் என்று தற்போதும் அழைக்கப்படும் வத்திக்கான் நிதி நிறுவனம்
இப்புதனன்று ஒரு புதிய இணையதளத்தை ஆரம்பித்துள்ளது. இவ்விணையதளத்தின் நோக்கம் குறித்து
வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், Freyburg அவர்கள், இந்நிறுவனத்தின் ஒளிவுமறைவற்ற
செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த இணையதளம் அமையும் என்று கூறினார். ஊடங்களும், செய்தியாளர்களும்
மட்டுமல்லாது, திருஅவையின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் இந்த இணையதளத்தின்
வழியாக வத்திக்கான் நிதி நிறுவனத்தை அணுகமுடியும் என்று Freyburg அவர்கள் தன் பேட்டியில்
தெளிவுபடுத்தினார். வத்திக்கான் நிதி நிறுவனத்தின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்வதற்கும்,
தேவைப்பட்டால், இந்நிறுவனத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
அண்மையில் ஒரு குழுவை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.