கற்றனைத்தூறும்..... தேக்கோ கலையின் மிகப்பெரும் திருவுருவம்
பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரிலுள்ள கிறிஸ்து மீட்பர் திருவுருவம், தேக்கோ கலைக்கு(Deco
Art) மாபெரும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இத்திருவுருவம், உலகிலுள்ள மிகப்பெரிய
உருவங்களில் 5 வது இடத்திலுள்ளது. ரியோ தெ ஜனெய்ரோவின் Tijuca காட்டிலுள்ள தேசியப் பூங்காவில்,
700 மீட்டர் உயரமுள்ள கொர்கொவாதோ(Corcovado) மலை உச்சியில் அந்நகரத்தை நோக்கியவண்ணம்
இயேசுவின் இத்திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. 38 மீட்டர் உயரமும், 30 மீட்டர் அகலமும்
உடைய இது, 8 மீட்டர் உயரமுள்ள அடிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 1,145
டன்கள் ஆகும். இது வலுவூட்டப்பட்ட கான்கிரீட் மற்றும் உருமாறிய பாறையின் வகையினைச் சேர்ந்த
சோப்புக்கல்லாலும்(soapstone) ஆனது. இதன் கட்டுமானப் பணிகள் 1922ம் ஆண்டு தொடங்கி 1931ம்
ஆண்டு முடிவடைந்தன. 25 ஆயிரம் டாலரில் அமைக்கப்பட்ட கிறிஸ்து மீட்பர் திருவுருவம் 1931ம்
ஆண்டு அக்டோபர் 12ம் தேதியன்று திறக்கப்பட்டது. பிரேசில் பொறியாளர் Heitor da Silva Costa
என்பவரால் வடிவமைக்கப்பட்டு பிரஞ்சு சிற்பி Paul Landowskiயினால் இது செதுக்கப்பட்டது.
1859ம் ஆண்டில் கொர்கொவாதோ மலையின் அழகை இரசித்த அருள்பணியாளர் Pedro Maria Boss என்பவர்
கிறிஸ்துவுக்கு இப்படியொரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டுமென்ற ஆவலை இளவரசி இசபெலிடம்
தெரிவித்து அதற்காக நிதி கோரியபோது இளவரசி அது குறித்து அக்கறை காட்டவில்லை. பின்னர்
1889ம் ஆண்டில் பிரேசில் நாட்டில் அரசும், மதமும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டபோது இக்கருத்து
நிராகரிக்கப்பட்டது. பின்னர் பிரேசில் சுதந்திரம் பெற்றதன் நூறாம் ஆண்டையொட்டி 1922ம்
ஆண்டில் இரண்டாம் முறையாக இம்மலையின்மீது ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்ப வேண்டும் என்னும்
கோரிக்கை ரியோ நகர கத்தோலிக்கரிடமிருந்து எழுந்தது. பிரேசில் கத்தோலிக்கர்கள் பல்வேறு
நிகழ்வுகளை நடத்தி இத்திருவுருவத்தை எழுப்ப நிதி திரட்டினர். இந்தக் கிறிஸ்து மீட்பர்
திருவுருவம், அமைதியின் அடையாளமாக திறந்த விரித்த கரங்களோடு இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் 75வது ஆண்டு விழா 2006ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி சிறப்பிக்கப்பட்டபோது ரியோ நகரின்
பேராயர் கர்தினால் ஆஸ்கார் ஷீல்டு, இதன் அடியில் ஒரு சிற்றாலயத்தை அருள்பொழிவு செய்தார்.
அதனால் இப்போது அங்கே திருமணமும், திருமுழுக்கு கொடுப்பதும் வழக்கமாகியுள்ளது. 2007ம்
ஆண்டு ஜூலை 7ம் தேதியன்று லிஸ்பனில் நடந்த ஒரு நிகழ்வின்போது, சுவிட்சர்லாந்தை மையமாகக்
கொண்ட New Seven Wonders என்ற அறக்கட்டளை, இயேசுவின் இத்திருவுருவத்தை புதிய ஏழு உலக
அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. உலகில் நன்கு அறியப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும்
ரியோவின் கிறிஸ்து மீட்பர் திருவுருவம் விளங்குகிறது. தேக்கோ கலை வேலைப்பாடுகள் முதலில்
பிரான்சில் 1920களில் வெளியாகி, பின்னர், 1930களில் பன்னாட்டு அளவில் பரவியது.