இலங்கையில் போர் காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய விசேட ஆணைக்குழு
ஜூலை,26,2013. 30 வருட போர் காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய விசாரணை ஆணைக்குழு
ஒன்றை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்ஷ
ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசுத்தலைவரின் பேச்சாளர் தெரிவித்தார். ஆணைக்குழுவின் பதவிக்காலம்,
அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பன குறித்து தீர்மானம் எடுக்கப்படும் வகையில் அரசுத்தலைவரின்
செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு அரசுத்தலைவரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர்
மொஹான் சமரநாயக்க கூறினார். போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட 2002ம் ஆண்டு
முதல் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009ம் ஆண்டு மே மாதம் 19ம்
தேதி வரை வடக்கு, கிழக்கு உட்பட, நாட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக
அரசுத்தலைவரின் உத்தரவின் பேரில் ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’
நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.