கோவில் ஒன்றைக்களங்கப்படுத்திய குற்றவாளிகளை மன்னித்த இலங்கையின் கர்தினால்
மால்கம் இரஞ்சித்
ஜூலை,25,2013. இலங்கையில் கத்தோலிக்கக் கோவில் ஒன்றைத் தாக்கி, களங்கப்படுத்திய குற்றவாளிகள்
மீது குற்றப்பழி சுமத்தாமல், அவர்களை மன்னிப்பதாக இலங்கையின் கர்தினால் மால்கம் இரஞ்சித்
அவர்கள் கூறினார். ஜூன் மாதம் 5ம் தேதி இலங்கையின் தெற்குப் பகுதியில், Angulana என்ற
ஊரில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சேவியர் கத்தோலிக்க ஆலயத்தைத் தாக்கி, அங்குள்ள திரு
நற்கருணைப் பேழையை எரிக்க முயன்ற மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இக்குற்றவாளிகளை
தான் முற்றிலும் மன்னிப்பதாக கர்தினால் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளது, இலங்கை வாழ் மக்களிடையே,
குறிப்பாக, அமைதியை விரும்பும் புத்த மதத் தலைவர்களிடையே மகிழ்வைத் தந்துள்ளது என்று
கொழும்பு உயர்மறை மாவட்டப் பிரதிநிதி அருள் பணியாளர் Cyril Gamin Fernando அவர்கள், CNA
கத்தோலிக்கச் செய்தியிடம் கூறியுள்ளார். திரு நற்கருணைப் பேழையை எரிக்க முயன்ற இக்குற்றவாளிகளின்
முயற்சிகள் பயனற்றுப் போயின என்றும், இந்த அவமரியாதை நிகழ்வுக்குப் பின்னர், அக்கோவிலில்
குற்றங்களுக்குக் கழுவாய் தேடும் வழிபாடு ஒன்று நிகழ்ந்தது என்றும் CNA செய்திக் குறிப்பு
கூறியுள்ளது.