2013-07-25 15:47:39

ஒடிஸ்ஸா மாநிலத்தின் ஐந்து மறைமாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ தலைவர்களுக்கு கருத்தரங்கு


ஜூலை,25,2013. இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், தங்கள் நம்பிக்கையால், அச்சமுதாயத்தில் நீதியையும், அமைதியையும் உருவாக்கும் புளிப்பு மாவாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் கூறினார்.
ஒடிஸ்ஸா மாநிலத்தில் நீதி நிறைந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன், அம்மாநிலத்தின் ஐந்து மறைமாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ தலைவர்களுக்கு இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, முன்னேற்றப் பணிக்குழு கருத்தரங்கு ஒன்றை அண்மையில் நடத்தியது.
இக்கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றிய பேராயர் பார்வா அவர்கள், புதியதோர் சமுதாயத்தை உருவாக்க கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய விவிலிய விழுமியங்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, முன்னேற்றப் பணிக்குழுவின் செயலர் அருள் பணியாளர் சார்ல்ஸ் இருதயம், இந்திய இயேசு சபை நீதிப் பணிக்குழுவின் செயலர் அருள் பணியாளர் ஸ்டனிஸ்லாஸ் ஜெபமாலை ஆகியோர் உட்பட பலர் இந்தக் கருத்தரங்கை வழி நடத்தினர் என்று இந்திய ஆயர் பேரவை செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CBCI








All the contents on this site are copyrighted ©.