திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோரே, இயேசுவின் குரலைக் கேளுங்கள்
ஜூலை,22,2013. வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நின்று கொண்டிருந்த திருப்பயணிகளில்
சிலர், போன் வியாஜ்ஜோ என்ற திருப்பயண வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் விளம்பரத் துணிகளைப்
பிடித்திருந்ததைத் தான் நின்றுகொண்டிருந்த வத்திக்கான் ஜன்னல் வழியாகப் பார்த்து அதைச்
சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், இத்திங்களன்று தான் தொடங்கியுள்ள பிரேசில் நாட்டுத்
திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். இந்தத் திருப்பயணத்தில்
செபத்தின்மூலம் ஆன்மீக வழியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை
பிரான்சிஸ், இப்பயணம், உலகெங்கிலுமுள்ள இளையோரின் மாபெரும் திருப்பயணத்தின் புதிய படிநிலை
என்றும் குறிப்பிட்டார். உலக இளையோர் தினத்தின் இந்த ஒரு வாரத்தை உலக இளையோர் வாரம்
என்றும் அழைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இளையோர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும்
என்றும் கூறினார்.