இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கக் கிறிஸ்தவ சபைகள் வரவேற்பு
ஜூலை,20,2013. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும்
தொடங்குவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் ஜான் கெரி எடுத்துவரும் முயற்சிகளை
வரவேற்றுள்ளன அமெரிக்க ஐக்கிய நாட்டு கிறிஸ்தவ சபைகள். கடந்த நான்கு மாதங்களில்
ஆறாவது தடவையாக மத்திய கிழக்குப் பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கெரி இவ்வெள்ளியன்று
நிருபர் கூட்டத்தில் பேசியபோது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே அமைதிக்கான நேரடிப்
பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது, ஆயினும் இது குறித்த
இறுதி உடன்பாட்டுக்காகத் தான் முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார். இஸ்ரேல் நீதித்துறை
அமைச்சர் Tzipi Livni, பாலஸ்தீனாவில் பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பான Saeb Erekat ஆகிய
இருவரும் வரும் வாரத்தில் வாஷிங்டன் சென்று இப்பேச்சுவார்த்தைகள் சம்பந்தப்பட்ட விவரங்களைத்
தயாரிப்பர் என்றும் கெரி கூறினார். மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர்
ஜான் கெரி எடுத்துவரும் இம்முயற்சிகளை வரவேற்றுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.