திருத்தந்தை பிரான்சிஸ் : இன்னும் மூன்று நாள்களில் நாம் ரியோவில் சந்திப்போம்
ஜூலை,19,2013. உங்களில் பலர் ஏற்கனவே ரியோ சென்றடைந்துவிட்டீர்கள், இன்னும் பலர் அங்குச்
சென்று கொண்டிருக்கிறீர்கள். இன்னும் மூன்றே நாள்களில் அங்கு நாம் ஒருவர் ஒருவரைச் சந்திப்போம்
என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று Twitter செய்தியொன்றை அனுப்பியுள்ளார். ஆங்கிலம்,
பிரெஞ்ச், இத்தாலியம், அரேபியம், இலத்தீன் ஆகிய மொழிகள் உட்பட ஒன்பது மொழிகளில் இந்த
Twitter செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ரியோ டி ஜெனீரோவில் உலக இளையோர் தின
நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, ப்ரெஞ்ச் கயானாவிலிருந்து இளையோர் சென்ற பேருந்து ஒன்று
விபத்துக்குள்ளானது குறித்த தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். இவ்விபத்தில் பலியான பிரான்ஸ் நாட்டு இளம்பெண் மற்றும் இதில் படுகாயமடைந்துள்ள
மூன்று பேரின் குடும்பங்கள், இக்குழுவை வழிநடத்திச் செல்பவர்கள் ஆகியோரின் வேதனையில்
தானும் முழுமனத்துடன் பங்குகொள்வதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் இந்த அனுதாபச் செய்தியை திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ
பெர்த்தோனே, ப்ரெஞ்ச் கயானா தலைநகர் Cayenne ஆயர் Emmanuel Lafont அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.