உரோமின் San Lorenzo பகுதியில் குண்டுகள் போடப்பட்டதன் 70ம் ஆண்டு
ஜூலை,19,2013. சரியாக எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1943ம் ஆண்டு ஜூலை 19ம் தேதியன்று
அமெரிக்க ஐக்கிய நாட்டு நேசப்படைகள் உரோமின் San Lorenzo பகுதியில் குண்டுகளைப் போட்டதில்
இறந்த மற்றும் காயமடைந்த மக்களைப் பார்ப்பதற்காக அன்று மாலையே அங்குச் சென்றார் திருத்தந்தை
12ம் பத்திநாதர் என்று லொசர்வாத்தோரே ரொமானோ நாளிதழ் அறிவித்தது. உடனடியாக San Lorenzo
பசிலிக்கா வந்த மக்கள் திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்களிடம் கண்களால் கண்ணீரோடு மட்டும்
பேசினர். திருத்தந்தையும் அவர்களை அணைத்துக்கொண்டார் என்று அந்த நாளிதழ் அறிவித்தது. 1943ம்
ஆண்டு ஜூலை 19ம் தேதி உரோமின் Tiburtino, Prenestino, Casilino, Labicano, Tuscolano,
Nomentano, San Lorenzo ஆகிய பகுதிகளில் ஏறக்குறைய 1,060 டன் எடையுள்ள நான்காயிரம் குண்டுகளைப்
போட்டதில் மூவாயிரம் பேர் இறந்தனர் மற்றும் 11 ஆயிரம் பேர் காயமடைந்தனர். San Lorenzoவில்
மட்டும் 1,500 பேர் இறந்தனர் மற்றும் 4,000 பேர் காயமடைந்தனர். இந்நினைவுநாளை முன்னிட்டு
உரோம் மறைமாவட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதி கர்தினால் Agostino Vallini,
இவ்வெள்ளிக்கிழமை மாலையில் San Lorenzo பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்துவது திட்டமிடப்பட்டுள்ளது.