திருப்பீடப் பேச்சாளர் : நிருபர் கூட்டத்தில் அனைத்துலக இளையோர் தினம்
பற்றிய விளக்கம்
ஜூலை,17,2013. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் இளையோர் நாளையொட்டி
எடுத்த முடிவை முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் நிறைவேற்றியதுபோல, தற்போதையத்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை எடுத்த முடிவை நிறைவேற்ற பிரேசில்
நாட்டுக்குச் செல்கிறார் என்பது திருத்தந்தையர்களின் தொடர்ச்சியைக் காட்டும் அழகான ஓர்
அம்சம் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள் தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார். ஜூலை
22, வருகிற திங்கள் முதல், ஜூலை 29, அடுத்தத் திங்கள் வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு மேற்கொள்ளும் முதல் அயல்நாட்டு மேய்ப்புப்பணி
பயணம் குறித்து இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அருள் தந்தை லொம்பார்தி அவர்கள்,
இவ்வாறு கூறினார். பிரேசில் நாட்டில் மும்முறை பயணங்கள் மேற்கொண்ட திருத்தந்தை இரண்டாம்
ஜான் பால், ஒரு முறை பயணம் மேற்கொண்ட முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகியோரைத்
தொடர்ந்து, இலத்தீன் அமெரிக்க நாட்டில் பிறந்தவரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில்
நாட்டுக்குத் தன் முதல் அயல்நாட்டுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்று அருள் தந்தை லொம்பார்தி
சுட்டிக்காட்டினார். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 28வது உலக இளையோர்
நாளைக் குறித்து எடுத்த முடிவுகள் அனைத்தையும் தான் நிறைவேற்றப் போவதாக, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பொறுப்பை ஏற்ற ஒரு சில நாட்களிலேயே அறிவித்ததால், இப்பயணம்
குறித்த திட்டங்களை அன்றிலிருந்து செயல்படுத்த முடிந்தது என்பதையும் அருள் தந்தை லொம்பார்தி
தெளிவுபடுத்தினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்பயணத்தின் அனைத்து நிகழ்வுகள்
குறித்தும் திருப்பீடப் பேச்சாளர் செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.