கர்தினால் Rylko : இறைவனைத் தேடிவரும் இளையோர், உலக இளையோர்
நாளின் வெற்றிக்குக் காரணம்
ஜூலை,17,2013. கடவுளும் மதமும் தேவையில்லை என்பதைக் கூறிவரும் உலகின் செய்திகளுக்கு மத்தியில்
இறைவனைத் தேடிவரும் இளையோரே, திருஅவை சிறப்பித்து வரும் உலக இளையோர் நாளின் வெற்றிக்குக்
காரணம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பொதுநிலையினர் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள
திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு
அளித்த பேட்டி ஒன்றில், உலக இளையோர் நாள் இலட்சக்கணக்கான இளையோரை கவர்ந்து வருவது குறித்து
எழுப்பப்பட்டக் கேள்விக்கு இவ்விதம் பதில் அளித்தார். கிறிஸ்துவைச் சந்திக்க ஆவல்
கொண்டுள்ள இளையோர் இவ்வுலகில் இருக்கின்றனர் என்பதை ஒவ்வோர் இளையோர் நாளும் நமக்குத்
தெளிவாக்குகிறது என்று முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கூறியதை கர்தினால்
Rylko தன் பேட்டியில் குறிப்பிட்டார். நடைபெறும் நம்பிக்கை ஆண்டில், நற்செய்தியின்
பணியாளர்களாய் இளையோர் திகழவேண்டும் என்ற ஆவலில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
அவர்கள் பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் 28வது உலக இளையோர் நாளுக்கு, "நீங்கள் போய்
எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்..." என்ற மையக்கருத்தைத் தெரிவு செய்தது குறித்தும்
கர்தினால் Rylko குறிப்பிட்டார். கத்தோலிக்கப் பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ள பிரேசில்
நாட்டு இளையோர், உலகெங்கிலுமிருந்து அங்கு வரும் இளையோருடன் தங்கள் நம்பிக்கை வாழ்வைப்
பகிர்வதற்கு இந்த இளையோர் நாள் அரியதொரு வாய்ப்பு என்றும் கர்தினால் Rylko தன் பேட்டியில்
வலியுறுத்தினார்.