2013-07-17 16:04:02

ஆஸ்திரேலிய இளையோர், பெரு நாட்டில் வறியோர் மத்தியில் பணி


ஜூலை,17,2013. விரைவில் துவங்கவிருக்கும் 28வது அகில உலக இளையோர் நாளில் கலந்துகொள்ள சென்றுள்ள ஆஸ்திரேலிய இளையோர், பெரு நாட்டின் லீமா நகரில் வறியோர் அதிகமாய் வாழும் San Juan de Miraflores பகுதியில் மக்கள் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சிட்னி பேராயர் கர்தினால் ஜார்ஜ் பெல், மூன்று ஆயர்கள், மற்றும் 23 அருள் பணியாளர்களுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்றுள்ள 560 இளையோர், பிரேசில் நாட்டுக்குச் செல்வதற்கு முன்னர், லீமா நகரின் வறியோர் மத்தியில் உழைத்து வருகின்றனர்.
உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் தாங்கள் அதிகம் பெறவிருக்கிறோம் என்பதை உணர்ந்துள்ள இவ்விளையோர், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளோருக்கு தங்களால் இயன்ற உதவிகள் தரவேண்டும் என்ற ஆவலில் இப்பணிகளை மேற்கொண்டுள்ளதாக Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
வறியோருக்கு இல்லங்கள் அமைத்தல், சாலைகளைச் சீரமைத்தல், சிற்றாலயம் ஒன்றை அமைத்தல் என்ற பல்வேறு முயற்சிகளில் இவ்விளையோர் வருகிற சனிக்கிழமை முடிய ஈடுபடுவர் என்று கூறப்பட்டுள்ளது.
சிட்னி உயர்மறைமாவட்டம், சிட்னி கத்தோலிக்கப் பல்கலைக் கழகம், ஆஸ்திரேலிய மாரனைட் வழிபாட்டு முறை கத்தோலிக்க இளையோர் அமைப்பு என்ற பல்வேறு அமைப்புக்களின் இளையோர் ஒருங்கிணைந்து இப்பணிகளைச் செய்து வருகின்றனர்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.