திருத்தந்தை பிரான்சிஸ் : செபம், மனத்தாழ்மை, பிறரன்பு ஆகியவை தூயவாழ்வுக்கான வழி
ஜூலை,16,2013. கிறிஸ்தவ வாழ்வில் செபம், மனத்தாழ்மை, எல்லார்மீதும் காட்டப்படும் பிறரன்பு
ஆகியவை இன்றியமையாத கூறுகள். இவை தூயவாழ்வுக்கான வழி என்று தனது டுவிட்டர் பக்கத்தில்
இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம்,
இஸ்பானியம், ப்ரெஞ்ச், போர்த்துக்கீசியம், ஜெர்மானியம், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில்
ஏறக்குறைய தினமும் எழுதி வருகிறார். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான்
வானியல் ஆய்வு மையத்திலுள்ள இயேசு சபை இல்லக் குழுவுடன் சேர்ந்து மதிய உணவு அருந்தினார்
என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம் என்று அக்குழுவினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில்
எழுதியுள்ளனர். இஞ்ஞாயிறன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவில் நண்பகல் மூவேளை உரை ஆற்றிய
பின்னர் அவ்விடத்திலுள்ள இயேசு சபை இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மதிய உணவு
அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.