ஒலி-ஒளி வடிவில் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு
ஜூலை,13,2013. கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டு,
இந்த 2013ம் ஆண்டில் இடம்பெறுவதையொட்டி இதனைக் கொண்டாடுவதற்குப் பல முயற்சிகளை எடுத்து
வருகின்றது வத்திக்கான். இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “விசுவசிப்பதற்குப் புரிந்துகொள்ளல்”
என்ற தலைப்பில் பல்வேறு மொழிகளில் ஒலி-ஒளி வடிவில் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி
ஏடு தயாரிக்கப்பட்டு வருகிறது. வத்திக்கானின் இம்முயற்சி குறித்து விளக்கிய, இம்மறைக்கல்வி
ஏடு தயாரிப்பின் இயக்குனர் Gjon Kolndrekaj, ஆயிரம் பக்கங்களையும், அதோடு 200 பக்கச்
சுருக்கமான ஏட்டையும் கொண்டுள்ள இம்மறைக்கல்வி ஏட்டை ஒலி-ஒளி வடிவில் தயாரிப்பது முதலில்
இயலாதது போல் தோன்றியது என்று கூறினார். ஒலி-ஒளி வடிவிலான இம்மறைக்கல்வி ஏடு 40 மணி
நேரங்கள் கொண்டதாய் உள்ளது என்றும் Kolndrekaj கூறினார். வத்திக்கான் புத்தக வெளியீட்டு
நிறுவனத்தின் இயக்குனர் அருள்பணி Giuseppe Costa அவர்கள், இம்மறைக்கல்வி ஏட்டை ஒலி-ஒளி
வடிவில் தயாரிக்கும் பொறுப்பை Kolndrekajடம் ஒப்படைத்துள்ளார்.