2013-07-12 15:11:04

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக ரியோ டி ஜெனீரோ ஆவலுடன் எதிர்பார்ப்பு


ஜூலை,12,2013. இம்மாதம் 22 முதல் 28 வரை பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவிருக்கும் அனைத்துலக இளையோர் தினத்துக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்பதற்கு அந்நாடு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்தார் கர்தினால் Stanislaw Rylko.
ரியோ டி ஜெனீரோவில் இடம்பெற்றுவரும் இளையோர் தின ஏற்பாடுகளைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ள, திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Rylko வத்திக்கான் வானொலிக்கு இவ்வெள்ளியன்று அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
அனைத்துலக இளையோர் தினம் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே இருக்கும் இவ்வேளையில் இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வப் பணியாளர்களின் தாராள உள்ளத்தையும் அறிவுத்திறனையும் கண்டு தான் வியப்படைவதாகத் தெரிவித்தார் கர்தினால் Rylko.
இவ்விளையோர் தினக் கொண்டாட்டங்களை ரியோ டி ஜெனீரோ நகரம் மட்டுமல்ல, பிரேசில் நாடு முழுவதுமே ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதை உணர முடிந்தது என்றும் கூறினார் கர்தினால் Rylko.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.