சிரியாவில் ஆயுதப் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும், ஐ.நா. பொதுச்செயலர் வேண்டுகோள்
ஜூலை,10,2013. இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான இரமதானையொட்டி, சிரியாவில் ஆயுதப் பயன்பாடு
நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் விண்ணப்பித்துள்ளார். இத்திங்களன்று
துவங்கிய இரமதான் மாதத்தையொட்டி செய்தி வழங்கியுள்ள பான் கி மூன் அவர்கள், இந்த ஒரு மாதமாகிலும்
ஆயுதங்களைக் களைந்து, அமைதி காக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். சிரியாவின் அரசும்,
ஏனைய போராட்டக் குழுக்களும் தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் கைதிகளை விடுவிக்குமாறும்
ஐ.நா. பொதுச்செயலர் தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார். 2011ம் ஆண்டு மார்ச் மாதம்
சிரியாவில் துவங்கிய உள்நாட்டுப் போராட்டத்தால், இதுவரை, அந்நாட்டு மக்கள் மூன்று ஆண்டுகளாக
இரமதான் மாதத்தை துன்பத்துடன் கழித்துள்ளனர் என்று ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. கடந்த
மூன்று ஆண்டுகளாக அந்நாட்டில் நிகழ்ந்துவரும் வன்முறைகளால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர்
கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 2 கோடிக்கும் அதிகமானோர் புலம் பெயர்ந்துள்ளனர் எனும் ஐ.நா.வின்
செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.