2013-07-06 16:32:24

திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவர் நம்மிடம் திருமறை நூல்கள் வழியாகவும், நம் செபத்திலும் பேசுகிறார்


ஜூலை,06,2013. ஆண்டவர் நம்மிடம், திருமறை நூல்கள் வழியாகவும், நம் செபத்திலும் பேசுகிறார். நாம் நற்செய்தியைத் தியானிக்கும்போது அவர் முன்பாக மௌனமாக இருப்பதற்குக் கற்றுக்கொள்வோம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‏@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் ஏறக்குறைய தினமும் எழுதி வருகிறார்.
மேலும், வருகிற திங்கட்கிழமையன்று இத்தாலியின் Lampedusa தீவுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று, அங்கு வாழும் புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் அத்தீவில் வாழும் மக்களைச் சந்தித்து ஊக்கப்படுத்தவுள்ளார்.
அண்மையில், ஆப்ரிக்காவிலிருந்து குடியேற்றதாரர்களை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் பலர் கடலிலே உயிரிழந்தனர். இவர்களுக்காகவும் Lampedusa தீவில் செபிக்கவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், தேவையில் இருக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறு அழைப்புவிடுப்பார் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.