ஜூலை 04, 2013. . கற்றனைத்தூறும்...... தொலை நோக்கி (டெலஸ்கோப்) உருவாகிய வரலாறு
ஹாலந்து நாட்டில் ஹான்ஸ் லிப்பன்ஷி என்பவர் ஒரு கண்ணாடிக் கடை வைத்து நடத்தி வந்தார்.
அங்கு தனது எடுபிடி வேலைகளுக்காக ஒரு சிறுவனைப் பணியில் அமர்த்தி வேலை வாங்கி வந்தார்.
1608ம் ஆண்டு ஒரு நாள் அந்தச் சிறுவன், கடையில் விற்பனைக்கு வைத்திருந்த சில கண்ணாடி
வில்லைகளை எடுத்து ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து
உட்குவிந்த கண்ணாடி வில்லை ஒன்றை எடுத்து சற்று தூரத்தில் வைத்து, தான் பணிபுரியும் கடையின்
அருகில் இருக்கும் ஒரு மாதா கோவிலை உற்று நோக்கத் தொடங்கினான். அவன் பார்த்த அந்த மாதக்
கோவிலின் கோபுரம் அவன் கண்ணுக்கருகே வந்து நின்றதைப் போல் அந்தக் குவிந்தக் கண்ணாடி வில்லைகள்
காட்டின. ஹான்ஸ் லிப்பன்ஷியும் அந்த குவிந்தக் கண்ணாடியை வைத்து தினமும் தூரத்தில் இருக்கும்
ஒவ்வொன்றையும் அருகில் பார்த்து இரசித்து வந்தார். இந்த விடயம் நாளடைவில் இத்தாலிய அறிவியலாளர்
கலிலேயோவின் காதுக்கு எட்டியது. கலிலியோவும் அந்தத் தத்துவத்தை அறிந்துகொண்டு, ஓர் உருண்டை
வடிவிலான சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கி அந்தக் குவிந்த கண்ணாடி வில்லைகளை முன்னும் பின்னும்
ஒவ்வொன்றாகப் பொருத்தி அவற்றைச் சற்று மேலும் கீழும் நகர்த்தி நகர்த்தி வித்தியாசமான
மாற்றங்களைக் கண்டு வியந்தார். பின்பு அவற்றிற்கு ஒரு வகையான வடிவம் அமைத்து இறுதியாக
டெலஸ்கோப் என்று பெயரிட்டார். அதுவே உலகில் தோன்றிய முதல் தொலைநோக்கியாகும். கலிலேயோ
கண்டுபிடித்த தொலைநோக்கியில் சில குறைபாடுகள் இருந்தன. புறம் குவிந்த கண்ணாடிகளைத் தொலைநோக்கியில்
பயன்படுத்திப் பார்க்கும்பொழுது காட்சியில் தெரியும் உருவங்களின் பக்கத்தில் பல வண்ணங்கள்
காணப்பட்டன. அதனால் காட்சிகள் தெளிவாகத் தெரியாமல் இருந்தன. இந்தக் குறையைச் சரி செய்ய
கலிலேயோவிற்குப் பின்பு இங்கிலாந்து அறிவியலாளர் சர் ஐசக் நியுட்டன் முயற்சி செய்தார்.
அப்பொழுது இந்தக் புறம்குவிந்த கண்ணாடியைப் பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் தொடரத்தான்
செய்யும் என்பதை உணர்ந்த நியுட்டன், முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற மாதிரி ரசம் பூசப்பட்டக்
கண்ணாடியைப் பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் பின்புதான் இந்த உலகிற்கு, குறைகள் எதுவும்
இல்லாத முதல் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.