ஆறாயிரம் இளையோர் தங்களின் இறையழைப்புக்குச் சாட்சி சொல்லவுள்ளனர்
ஜூலை,02,2013. இம்மாதம் 4 முதல் 7 வரை, குருத்துவ மாணவர்கள், இருபால் துறவு சபைகளின்
புகுமுகுத்துறவியர் (நவதுறவியர்) மற்றும் இறையழைத்தலின் பாதையை ஊக்குவிப்பவர்கள் என உலகின்
ஏறத்தாழ ஆறாயிரம் இளையோர் தங்களின் இறையழைப்புக்குச் சாட்சி சொல்லவுள்ளனர் என்று திருப்பீட
பத்திரிகை அலுவலகம் அறிவித்தது. நம்பிக்கை ஆண்டின் பெரும் நிகழ்வுகளில் ஒன்றாக இவ்வியாழனன்று
தொடங்கும் இந்த இளையோர் கூட்டத்தின் முதல் நிகழ்வாக, காஸ்தெல் சாந்த் ஆஞ்சலோவிலிருந்து
கொன்சீலியாசினோ சாலை வழியாகத் திருப்பயணம் தொடங்கி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா
பேராலயத்தில் நிறைவடையும். அங்கு இவர்களை கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி வரவேற்று உரை வழங்குவார்.
5ம் தேதியன்று பல்வேறு மொழிகளில் மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறும். 6ம் தேதி காலையில்
ஒப்புரவு திருவருள்சாதனம் மற்றும் திருநற்கருணை ஆராதனை நடைபெறும். இவ்விளையோருடன்
வரும் தலைவர்களுக்கு இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் உருவாக்குதல் குறித்த விவகாரங்களில்
சிந்தனைகள் வழங்கப்படும். 7ம் தேதி ஞாயிறு காலையில் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்விளையோருக்குத் திருப்பலி நிகழ்த்துவார் என, திருப்பீட
பத்திரிகை அலுவலகம் அறிவித்துள்ளது.