2013-07-01 13:18:23

கற்றனைத்தூறும்.....உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம்


புவியியலின்படி எந்த நிலப்பகுதி மிகக் குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி.மீ. மழைப்பொழிவைப் பெறுவது பாலைவனம் எனச் சொல்லப்படுகிறது. தென் அமெரிக்காவிலுள்ள அட்டகாமா பாலைவனத்தில் மழை பெய்ததாக ஒருபோதும் பதிவு செய்யப்படவில்லை. ஆயினும், இதன் சிலே பகுதியில் ஆண்டுக்கு 1 மி.மீட்டர் முதல் 15 மி.மீட்டர்வரை மழை பெய்கின்றது எனவும் சொல்லப்படுகின்றது. எனவே அட்டகாமா பாலைவனம், உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என, அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம், தேசிய புவியியல் கழகம் மற்றும் பிற அமைப்புகளும் கூறியுள்ளன. இப்பாலைவனம், தென் அமெரிக்கக் கண்டத்தில், சிலே, பெரு, பொலிவியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் நிலப்பரப்பில், பசிபிக் பெருங்கடல் கடற்கரையில், ஆன்டஸ் (Andes) மலைகளுக்கு மேற்கே ஏறக்குறைய ஆயிரம் கிலோ மீட்டர்(600 மைல்) நீளத்தில் அமைந்துள்ளது. இது, 1,05,000 சதுர கிலோ மீட்டர் (40,541 ச.மைல்) நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இப்பாலைவனத்தில் உப்பு ஏரிகளும், மணலும், ஆன்டஸ் மலையை நோக்கிச் செல்லும் எரிமலைக் குழம்புகளும் உள்ளன. இங்கு 1570ம் ஆண்டுக்கும் 1971ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக மழையே பெய்யவில்லை என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இப்பகுதி எவ்வளவு வறண்ட பகுதி என்றால், இங்குள்ள 6,885 (22,589 அடி) உயரமான மலைகள் முற்றிலும் பனி இன்றி உள்ளன. இப்பாலைவனத்திலுள்ள சில ஆற்றுப் படுகைகள், 1,20,000 ஆண்டுகளாக வறண்டு போயிருக்கின்றன எனப் பிரித்தானிய அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். அட்டகாமா பாலைவனத்தின் சிலே பகுதியிலிருந்து 2020ம் ஆண்டில் செவ்வாயக் கிரகத்துக்கு விண்கோள் ஒன்றை அனுப்புவதற்கு நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.