ஜூன்,29,2013. இலங்கையில் 2015ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்கும் முயற்சியை
எடுத்து வருகிறது ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யுனிசெப். இலங்கையில் எழுத்தறிவு
உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் உச்சத்தில் இருக்கின்றபோதிலும், அங்குச் சில பகுதிகளில்,
இன்றும் ஆரம்பப்பள்ளியைப் பாதியில் கைவிடும் சிறார்கள் கணிசமாக இருப்பதாக யுனிசெப் அமைப்பு
நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இலங்கை அரசின் ஆதரவுடன் யுனிசெப் நிறுவனம் நடத்திய
இந்த ஆய்வின்படி, இலங்கையில் மற்ற நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைவிட மலையக தோட்டப்பகுதியைச்
சேர்ந்த பிள்ளைகளே அதிகமாகத் தங்களது கல்வியை ஆரம்ப்ப்பள்ளிக்கூட மட்டத்திலேயே கைவிடுவதாகத்
தெரியவந்துள்ளது. மலையகத் தோட்டங்களில் ஆண்பிள்ளைகளைவிட பெண்குழந்தைகளே அதிகமாக ஆரம்பப்பள்ளிக்கூடப்
படிப்பைக் கைவிடுவதாக இவ்வறிக்கை கூறியுள்ளது. இதற்கு, சமூக-பொருளாதார நிலையே காரணங்களாகச்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.